ஊரணிகளை தூர்வார நடவடிக்கை - சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் கடந்த 17 ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாத 40 ஆயிரம் ஊரணிகளை தூர்வார வேண்டும் என்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2024-04-30 03:39 GMT

பைல் படம் 

தமிழகத்தில் சுமார் பன்னிரண்டு ஆயிரத்து ஐந்நூற்று இருபத்து நான்கு ஊராட்சிகள் உள்ளன. இவ்வுராட்சிகளில் சுமார் 41,948 ஊரணிகள், குட்டைகள், பாசன கண்மாய்கள், குளங்கள், உள்ளன. தவிர தமிழகத்தில் 46ஆறுகள், 81 அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் உள்ளன. தமிழகத்தில் வற்றாத ஜீவ நதிகள் இல்லை. சுமார் 40% மக்கள் விவசாயம் சார்ந்த தொழில் செய்கின்றனர். கடந்த 2007ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆண்டு தோறும் தமிழக அரசால் இயந்திரங்கள் மூலம் ஊராட்சிகளில் உள்ள நீர் நிலைகளான ஊரணிகள், குட்டைகள், வரத்துகள் அந்தந்த ஆண்டு நிதிநிலை மைக்கேற்ப தூர்வாரப்பட்டு மழை நீர் சேமிக்கப்பட்டன.

Advertisement

2007ம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் தேசிய அளவில் செயல்படுத்தப்ட்ட பிறகு நீர் வள ஆதாரத்துறையின் கட்டுபட்பாட்டில் உள்ள பாசன குளங்கள் தவிர்த்து பெரும்பாலான ஊராட்சி நீர் நிலைகள், ஊரணிகள், குட்டைகள் முழுவதும் தேசி ஊரக வேலை திட்டத்தில் மனித சக்திகள் மூலம் மூலம் தூர் வாரப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மூலம் ஒவ்வொரு ஊரணிக்கும் அதிக பட்சம் ரூ ஐந்து இலட்சம் வரை மனித சக்திகள் மூலம் தூர் வாரப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்ட்டு பதினேழு ஆண்டுகளில் ஊரணிகளில்ஒரு அடி ஆழம் கூட முறையாக தூர் வாரப்பட வில்லை.

இதனால் ஆண்டுதோறும் நீர்நிலைகள் மண் மேடாகியும், புல்பூண்டு முளைத்தும், மனித உயிர்களுக்கு உலை வைக்கக் கூடிய சீமை வேலிகருவை மரங்கள் வனம் போல் முளைத்து அடர்ந்து காணப்படுகிறது.இதனால் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வட கிழக்கு பருவ மழை வரலாறு காணாத வகையில் பெய்தும் மழை நீரை சேமிக்க முடியவில்லை. ஆண்டு தோறும் பல இலட்சம் செலவில் ஊரணிகள் மனித சக்திகள் மூலம் தூர்வார செலவு செய்வதை தவிர்த்து இயந்திரங்கள் மூலம் தூர் வாரினால் மட்டுமே மழை நீரை முறையாக சேமிக்க முடியும். எனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாருதல், வரத்துக்கால் தூர்வாருதல் பனியை இயந்திரங்கள் கொண்டு தூர் வாரும் வகையில் விதிமுறைகளை திருத்தம் செய்து வரக்கூடிய வடகிழக்கு பருவ மழைக்கு முன் ஊராட்சிகளில் உள்ள வரத்துக் கால்வாய், குளம், குட்டை ஊரணிகளில் இயந்திரங்கள் மூலம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் மற்றும் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், கிராம விவசாயிகள் உட்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News