திருச்செந்தூரில் இருந்து அனைத்து ரயில்களும் இயக்கம்

திருச்செந்தூரில் இருந்து 20 நாட்களுக்கு பிறகு செந்தூர் எக்ஸ்பிரஸ் ஓடத்தொடங்கியது. நெல்லை-திருச்செந்தூர் இடையே நேற்று முதல் அனைத்து ரயில்களும் இயக்கப்படுகிறது.

Update: 2024-01-08 02:45 GMT

துவங்கியது அனைத்து ரயில் சேவை

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி உடைந்தன. ஸ்ரீவைகுண்டம் அருகே தாதன்குளம் அருகில் தண்டவாளம் அரித்து செல்லப்பட்டது. கடந்த 17-ந்தேதி இரவில் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டதால், அதில் இருந்த 800-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். பெருவெள்ளத்தில் ஆழ்வார்திருநகரி-நாசரேத் இடையிலான தண்டவாளமும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு சேதமடைந்தது. பின்னர் நெல்லையில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து நெல்லை- திருச்செந்தூர் இடையே ரயில்வே ஊழியர்கள் முழுமையாக ஆய்வு செய்து தண்டவாள சீரமைப்பு பணிகளை தொடங்கினர்.

தண்டவாளம் பெரிதும் சேதமடைந்த ஸ்ரீவைகுண்டம் -தாதன்குளம் இடையே ஒரு பகுதியாகவும், நாசரேத் -ஆழ்வார்திருநகரி இடையே மற்றொரு பகுதியாகவும் இரவு பகலாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. மின்வழித்தட பணிகளும் நிறைவு பெற்றதால் நேற்று முன்தினம் மின்சார என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை தெற்கு ரயில்வே தலைமை பொறியாளர் பென்னி, கூடுதல் கோட்ட பொறியாளர் பிரவீனா(தெற்கு), உதவி கோட்ட பொறியாளர் முத்துக்குமார் (நெல்லை) ஆகியோர் நேற்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்களை நெல்லை சந்திப்பு ரயில் நிலைய மேலாளர் முருகேசன், போக்குவரத்து ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

பின்னர் 2-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு மின்சார ரயில் என்ஜினுக்கு மாலை அணிவித்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து அந்த என்ஜினில் தலைமை பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஏறி, நெல்லை- திருச்செந்தூர் வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தினர். தண்டவாளத்தின் உறுதித்தன்மை, சிக்னல், மின்பாதை எப்படி உள்ளது? என்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து திருச்செந்தூரில் இருந்தும் நெல்லைக்கு மின்சார என்ஜினை அதிவேகமாக இயக்கி சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்தனர். சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட என்ஜின், 61 கிலோ மீட்டர் பயண தூரத்தை 1 மணி 10 நிமிடங்களில் கடந்தது. தொடர்ந்து நெல்லை-திருச்செந்தூர் இடையே ரயில்களை இயக்குவதற்கு தலைமை பொறியாளர் அனுமதி அளித்தார். மாலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் பெட்டிகளை மின்சார என்ஜின் மூலம் திருச்செந்தூருக்கு கொண்டு சென்றனர். திருச்செந்தூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.25 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது

. 20 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ஓடத் தொடங்கியதால், அதில் ஏராளமான பயணிகள் ஆர்வமுடன் பயணித்தனர். காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ரயில் நிலையங்களில் நின்று சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடங்கினர். ரயில்கள் கால அட்டவணை  நேற்று முதல் திருச்செந்தூர்-நெல்லை இடையே அனைத்து ரயில்களும் இயக்கப்படுகிறது. எனினும் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 7.20 மணிக்கு புறப்படும் ரயில் இன்று மட்டும் இயக்கப்படாது. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 8.15 மணி, மதியம் 12.20 மணிக்கு பாலக்காடு ரயில், பிற்பகல் 2.30 மணிக்கு வாஞ்சி மணியாச்சி ரயில், மாலை 4.25 மணி மற்றும் 6.15 மணிக்கு நெல்லை ரயில் ஆகியவை புறப்படுகிறது. இரவு 8.25 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு அதிகாலை 4.30 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ், காலை 7.10 மணி, 10.10 மணி, 11.40 மணி, மதியம் 1.30 மணி, மாலை 4.30 மணி, 6.50 மணிக்கு பாசஞ்சர் ரயில்களும் புறப்படுகின்றன. இன்று முதல் வழக்கமான கால அட்டவணைப்படி அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News