அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

காவல்துறைக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2024-05-24 17:22 GMT

அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் காவலர் ஒருவர் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்க நடத்துனர் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிகழ்வுகள் கவலையளிப்பவையாக உள்ளன.

காவலர்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் விஷயத்தில் தமிழக அரசுத் தரப்பில் இரு ஆண்டுகளாகக் காட்டப்படும் அலட்சியம் காவல்துறைக்கும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான மோதலாக மாறிவிடக் கூடாது. நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் நாங்குநேரி என்ற இடத்தில் ஏறிய ஆறுமுகப்பாண்டி என்ற காவலரிடம் பயணச்சீட்டு எடுக்கும்படி நடத்துனர் கேட்ட போது, பயணச்சீட்டு எடுக்க காவலர் மறுத்துள்ளார். காவலர் பணியில் இருப்பவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த வாக்குவாதத்தை பயணி ஒருவர் காணொலியாக பதிவு செய்து வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இதுகுறித்து விளக்களித்த அரசுப் போக்குவரத்துக் கழகம், ‘‘அரசுப் பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்க முடியாது. அதற்கான அனுமதி வாரண்ட் இருந்தால் மட்டும் தான் பயணிக்க முடியும்’’ என்று கூறியது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தலைநகர் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு எதிராக போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. ஒருவழிப் பாதையில் பயணித்தல், சீருடை அணிவதில் குறைபாடு, நிறுத்தத்தைத் தாண்டி நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி அரசுப் பேருந்துகளுக்கு தண்டங்களை விதித்து வருகின்றனர்.

கடந்த இரு நாட்களில் மட்டும் 200&க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டிருக்கிறது. அரசுப் பேருந்துகளுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையில், காவலர்களின் இலவச பயணம் குறித்த போக்குவரத்துக் கழக அறிவிப்புக்குப் பிறகு, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் இது பழிவாங்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால், இது காவல்துறைக்கும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான மோதலாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. அத்தகைய மோதல் ஏற்பட்டால் அது பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டுமின்றி, தமிழகத்தின் சட்டம் & ஒழுங்கையும் பாதிக்கக்கூடும். அதற்கு முன்பாக இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும். ஆனால், இது குறித்து எந்தக் கவலையுமின்றி தமிழக அரசு மிகவும் அலட்சியமாக செயல்படுகிறது. காவல்துறைக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News