அரிசி ஆலைகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு

தஞ்சாவூர் அருகே அரிசி ஆலைகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Update: 2023-12-01 09:59 GMT

தஞ்சாவூர் அருகே அரிசி ஆலைகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 தஞ்சாவூர் அருகே அரிசி ஆலைகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் கொள்முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து தஞ்சாவூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக நெல் கொண்டு வருவதை தடுக்கவும், ரேஷன் அரிசி பதுக்கல், விற்பனையை தடுக்கவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி, குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு தஞ்சாவூர் டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் இவர்கள் சோதனை நடத்தினர். இந்நிலையில், தஞ்சாவூர்- புதுக்கோட்டை மாவட்ட எல்லையான அற்புதாபுரம், திருக்கானூர்பட்டி மற்றும் வல்லம் பகுதிகளில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகளில் நேற்று குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து இந்த அரிசி ஆலைகளுக்கு அரைவைக் காக அனுப்பப்பட்டு வரும் நெல் முறையாக அரைவை செய்யப்பட்டு, பொது விநியோக திட்டத்தில் விற்பனை செய்ய அனுப்பப்படுகிறதா? ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு முறைகேடாக பயன்படுத்தப்படுகிறா? என ஆய்வு நடத்தினர். இதேபோன்று தொடர்ந்து சோதனை நடத்தப்படும். இதில், முறைகேடு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News