கூட்டுறவு சங்கங்களில்140 உதவியாளர் பணியிடத்துக்கு 3,600 பட்டதாரிகள் விண்ணப்பம்: 24-ந் தேதி எழுத்து தேர்வு
தேர்வுக்கான பணிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்
Update: 2023-12-10 12:14 GMT
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் கடந்த மாதம் 10-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. 140 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரிகள் சுமார் 3 ஆயிரத்து 600 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த பணிக்கான எழுத்து தேர்வு வருகிற 24-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சேலம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படுகிறது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 140 உதவியாளர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் 3,600 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு வருகிற 24-ந் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்’ என்றனர்.