ஒரு திட்டம் கூட பாஜக கொண்டு வரவில்லை - ப.சிதம்பரம்

நினைவில் வைக்கிற அளவிற்கு ஒரு திட்டம் கூட பாஜக கொண்டு வரவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.45, டீசல் ரூ.40 என்ற அளவிற்கு குறைப்பதாக கூறினார்கள். ஆனால் சரித்திரம் காணாத விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை தான் அவர்களின் ஆட்சியில் எச்சமாக உள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Update: 2024-04-05 02:24 GMT

ப.சிதம்பரம்

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய பா சிதம்பரம், கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. கடந்த வெற்றி போல் இந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட இந்தியா கூட்டணி வெற்றி பெறும். ஒன்றிய பாஜக அரசு இந்த முறை ஆட்சியை பிடித்தால் அடுத்த முறை தேர்தல் நடைபெறுமா என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அரசின் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை நடுத்தர மக்களை தொடர்ந்து பாதித்து வருகிறது.

பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் 45 ரூபாய் டீசல் 40 ரூபாய் குறைக்கிறோம் என்று சொன்னார். ஆனால் செய்யவில்லை. ஒவ்வொரு நபரின் வங்கி கணக்குகளில் 15 லட்ச ரூபாய் செலுத்துவேன் என்று கூறினார்கள், ஆனால் அதையும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி சிலிண்டர் விலை 450 ரூபாய் இருந்தது மற்றும் பெட்ரோல் 75 ரூபாய் இருந்தது. விலை வாசி பற்றி மோடி எப்போதும் கண்டுகொள்வதில்லை. நினைவில் வைக்கிற அளவிற்கு ஒரு திட்டம் கூட பாஜக கொண்டு வரவில்லை. தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிவாரணம் பாதிப்புக்கு இது வரைக்கும் நிதி கொடுக்க வில்லை, காங்கிரஸ் ஆட்சியில் தான் நிவாரணம் நிதி என்ற திட்டத்தை கொண்டு வந்தோம். சரித்திரம் காணாத விலை வாசி மற்றும் வேலையின்மை தான் அவருடைய எச்சம். நாட்டில் 4 மற்றும் 5 சதவீதம் வளர்ச்சி இருந்தால் மொத்த உற்பத்தி அதிகரிக்கும். அது ஒரு பொதுவான கருத்து தான். காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் வளர்ச்சி 7.5 சதவீதம் அதிகரித்தது ஆனால் பாஜக ஆட்சியில் நாட்டில் வளர்ச்சி 5.8 சதவீதம் மட்டும் தான். திமுக ஆட்சியில் மகளிர் உரிமை தொகை அளிக்கப்பட்டு வருகிறது .இலவச பேருந்து வசதி என்பது - கூண்டு கிளிகளுக்கு ஒரு சிறகை கொடுத்தது போல் மகளிருக்கு உள்ளது. இத்திட்டத்தினால் பெண்கள் சிறகை விரித்து பறந்து வருகின்றனர்.

Tags:    

Similar News