பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கை பெட்டி வைத்து கருத்து கேட்பு பாஜக தொடக்கம்

வளர்ச்சியடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம் என்ற பெயரில், மக்களவைத் தேர்தலையொட்டி இடம்பெற வேண்டிய கருத்துகளை பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கை பெட்டி மூலம் பெறும் பணியை பாரதிய ஜனதா கட்சி தொடங்கியது.

Update: 2024-03-13 17:41 GMT

கருத்து கேட்பு பெட்டி  

வளர்ச்சியடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம் என்ற பெயரில் மக்களவைத் தேர்தலையொட்டி இடம்பெற வேண்டிய கருத்துகளை பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கை பெட்டி மூலம் பெறும் பணியை பாரதிய ஜனதா கட்சி தொடங்கியது. மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்க்கப்படும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியஅம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை பெறும் வகையில், மண்டலம் வாரியாக தேர்தல் அறிக்கை பெட்டி வைத்து, பொதுமக்களிடம் படிவத்தை வழங்கி அதை பூர்த்தி செய்து கட்சித் தலைமைக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நான்குமுனை சந்திப்பு அருகிலுள்ள நிழற்குடையில் தேர்தல் அறிக்கை பெட்டி வைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம் என்ற பெயரில் பொதுமக்களிடம் படிவம் வழங்கப்பட்டு, அதில் தங்கள் பகுதிக்குத் தேவை , என்ன குறை உள்ளது போன்ற கருத்துகள் பெறப்பட்டன. இதை பொதுமக்கள் தேர்தல் அறிக்கை பெட்டியில் செலுத்தினர். இந்த நிகழ்வுக்கு விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொதுச் செயலர் எல்.சதாசிவம் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.ஏ.டி.கலிவரதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மனுக்களைப் பெறுதலைத் தொடங்கி வைத்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் தியாகராஜன், சரண்யா திருநாவுக்கரசு, மாவட்டச் செயலர் குபேரன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், நிர்வாகிகள் ரேகாபாய், லட்சுமி, மண்டலத் தலைவர்கள் விஜயன், அருள்பிரகாஷ், ராஜபாலாஜி, பட்டியல் அணித் தலைவர் திருநாவுக்கரசு, இளைஞரணி மாவட்டப் பொதுச் செயலர் சிலம்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News