மெட்ரோ ரயில் நிறுவனம் அதிரடி முடிவு

மாதவரத்தில் இருந்து விம்கோ நகர் வழியாக எண்ணூர் வரை சுமார் 16.கி.மீ தூரத்திற்கு புதிய வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

Update: 2024-05-11 15:49 GMT

சென்னை மெட்ரோ

சென்னையின் பிரதான போக்குவரத்தாக மாறியுள்ள சென்னை மெட்ரோ ரயில் முதற்கட்டமாக சுமார் 54.1 கிலோமீட்டர் தொலைவிற்கு பச்சை மற்றும் நீலம் என இரண்டு வழித்தடத்தில் இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலும் என 3 வழித்தடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் சுமார் 116 கிலோமீட்டர் தொலைவிற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திட்டத்தின் நீட்டிப்பாக கோயம்பேடு முதல் முகப்பேர் வழியாக ஆவடி வரையிலும் பூந்தமல்லியில் இருந்து புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் வரையிலும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக (DPR) விரிவான திட்ட அறிகையும் தயார் செய்யும் பணியிலும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் வடசென்னை மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் அவர்களின் கோரிக்கையை ஏற்கும் வகையிலும் மாதவரத்தில் இருந்து விம்கோ நகர் வழியாக எண்ணூர் வரை சுமார் 16.கி.மீ தூரத்திற்கு புதிய வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான முறையான டெண்டரை விரைவில் வெளியிட உள்ளது மெட்ரோ நிர்வாகம்.

Tags:    

Similar News