ரூ.1,000 கொடுத்து வாக்குகளை பெறலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1,000 கொடுத்து வாக்குகளை பெறலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகவும், மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் வழங்குவதன் மூலம் நூற்றுக்கு நூறு சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் வாய் பந்தல் போட்டுள்ளார். 'தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம்' என்று 2021 தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக தாய்மார்களை ஏங்க வைத்துவிட்டு இப்போது, பாதிக்கும் குறைவான மகளிருக்கு மட்டும் மாதம் 1,000 ரூபாயை வழங்கி, நாக்கில் தேன் தடவும் வேலையில் இந்த தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சிலரை சில நாள் ஏமாற்றலாம், பலரை பலநாள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை" என்றும் அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.