பழங்குடி கிராமத்திற்கு முதல்முறையாக பேருந்து சேவை

நீலகிரி ,ஈரோடு மற்றும் கோவை மாவட்ட எல்லையில் அடர்ந்த வனப் பகுதிக்கு நடுவே அமைந்துள்ள கள்ளாம்பாளையம் பழங்குடியினர் கிராமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முதலாக பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. பேருந்து சேவையை துவக்கிவைத்து நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் அதே பேருந்தில் கள்ளாம்பாளையம் பழங்குடி கிராமத்திற்கு சென்றனர்.

Update: 2024-03-04 08:36 GMT

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் 66% வனப்பகுதியை கொண்டது. நீலகிரி மாவட்டத்தில் கடைக்கோடியில் அமைந்துள்ளது. தெங்குமரஹடா மற்றும் கள்ளாம்பாளையம் பழங்குடியினர் கிராமம். இந்த கிராமங்களுக்கு செல்ல நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் சுமார் 30கி.மீகி., தூரம் கரடு முரடான சாலையில் பயணிக்க வேண்டும்.

கள்ளாம்பாளையம் பழங்குடியினர் கிராமத்திற்கு நாடு சுதந்திர பெற்ற பிறகு இதுவரை பேருந்து சேவை என்பது எட்டா கனியாகவே இருந்தது . இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு பேருந்து சேவையை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கில் கோத்தகிரியில் இருந்து தெங்குமரடா வரை சென்று அரசு பேருந்தை முதன்முறையாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவின் முயற்சியால் கல்லாம்பாளையம் வரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்த பேருந்து சேவை கோத்தகியில் இருந்து துவங்கப்பட்டது. பேருந்து தெங்குமரஹடா செக்போஸ்ட் வந்த போது, அந்த பேருந்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் அதில் கள்ளாம்பாளையம் வரை பயணித்தனர். அங்கு சென்ற அவர்கள் கள்ளாம்பாளையம் பகுதியில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினர். கள்ளாம்பாளையம் பகுதியில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை மருத்துவமனை கட்டடம், 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தானியக்கிடங்குகள் ஆகியவற்றை திறந்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பழங்குடியினர் மக்களின் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா மற்றும் அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் 59 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியினை வழங்கினர். காட்டுமாடு தாக்கி ஒருவர் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த ராசா அவரது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா பேசுகையில், " திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் சென்றடைய அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதால் இப்பகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் ஆறு மாசத்திற்குள் நிறைவேற்றப்படும்,"என்றார்.

Tags:    

Similar News