நாளை உருவாகிறது ரிமால் புயல்
நாளை காலை மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவாகிறது ரிமால் புயல், கரையை கடக்கும் பொழுது மணிக்கு 130 கிலோ மீட்டர் வரையிலும் கூட வேகம் இருக்கும்.;
கோப்பு படம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து மாலை 5:30 மணி அளவில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டு உள்ளது. இது வங்கதேசத்தின் கெபுபாராவிற்கு தெற்கே சுமார் 650 கி.மீ, தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு தென்-தென்கிழக்கே சுமார் 620 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் கேனிங்கிற்கு தெற்கே 670 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்க கடலில் புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து, அது வடக்கு நோக்கி நகர்ந்து நாளை இரவுக்குள் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும் நாளை மறுநாள் நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடலில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 110-120 வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.