ஜாபர் சாதிக் கைது தேர்தலில் எதிரொலிக்கும் - ஜெயக்குமார்.

ஜாபர் சாதி கொடுக்கப்போகும் ஒப்புதல் வாக்குமூலத்தை நினைத்து திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது, இது மக்களவைத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும், திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2024-03-10 01:56 GMT

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 

சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற அதிமுக தேர்தல் அறிக்கைக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, ஓ எஸ் மணியன் உள்ளிட்டோர் பங்கேற்று தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் பல உண்மைகள் வெளிவர போகிறது, அவர் ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன். அவருக்கு திமுக அயலக பிரிவில் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தது. ஜாபர் சாதிக் கொடுக்கப்போகும் ஒப்புதல் வாக்குமூலத்தை நினைத்து திமுகவிற்கு பயம் ஏற்பட்டுள்ளது.

திமுக முதன்மை குடும்பம், அமைச்சர்களுடன் அவருக்கு உள்ள தொடர்பு வெட்ட வெளிச்சத்திற்கு வரும். 26 குற்றங்கள் புரிந்த நபருக்கு டிஜிபி பரிசளிக்கும் அளவு ஆட்சி மோசமாக உள்ளது. ஜாபர் சாதிக் கைதால் திமுக கலகலத்து போயுள்ளது. மத்திய புலனாய்வுத் துறை இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் குறித்து இதுவரை 10 சதவீதம் மட்டுமே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, உரிய பாடத்தை புகட்ட வேண்டும். ஜாபர் சாதிக் கைது மக்களவை தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.திமுகவிற்கு இது ஒரு பின்னடைவு, மரண அடி. என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News