லோக் சபா தேர்தலில் போட்டியிட தயாரா..? - போட்டிப்போட்டு அழைக்கும் திமுக, அதிமுக

அதிமுக, திமுக வேட்பாளர் விண்ணப்பம் பெற அறிவிப்பு வெளியீடு

Update: 2024-02-19 05:51 GMT

, அதிமுக, திமுக விருப்ப மனு

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வரும் 21ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம் அரசியல் கட்சிகளும், கூட்டணி அமைத்தல், தேர்தல் குழு நியமித்தல், தொகுதி ஒதுக்கீடு, அறிக்கை தயாரித்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

அதிமுக தனது கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஒரு கட்சியுடனும் நிலையான கூட்டணி உறுதி செய்யாமல் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு குறித்த அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “ நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 மக்களவை தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர், தலைமை கழகத்தில் வரும் 21ம் தேதி முதல் மார்ச் ஒன்றாம்ட் ஹேதி வரை விருப்ப மனுக்கான விண்ணப்பத்தை பெறலாம்” என்று கூறப்பட்டுள்ளது. 

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என்றும் அதை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செலுத்த பொதுத் தொகுதிக்கு ரூ.20,000 என்றும், தனி தொகுதிக்கு ரூ.15,000 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கடந்த முறை பாஜகவின் கூட்டணியில் அதிமுக போட்டியிட்டது. இந்த முறை பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தனது தோழமை கட்சிகளுடன் போட்டியிடுகிறார். 

இதற்கிடையே, இன்று முதல் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ''நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள், வரும் பிப்.19-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.

போட்டியிட விரும்புவோர், விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, மார்ச் 1 முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் கட்டணம் ரூ.50,000. விண்ணப்ப படிவத்தை ரூ.2,000 செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம்'' என தெரிவித்திருந்தார்.

மக்களவை தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், தமிழகத்தின் தொகுதி பங்கீடு குறித்து தனது தோழமை கட்சிகளுடன் திமுகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே விஜயகாந்த் மறைவை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளரான பிரேமலதா அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், தனது வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். 

Tags:    

Similar News