வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் வேலு ஆய்வு

கனமழையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம், சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் வேலு, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Update: 2023-12-22 13:23 GMT

கனமழையினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம், சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் வேலு, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீரால் சூழப்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மின்சாரம், போக்குவரத்துகள், அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க இயலாத நிலை ஏற்பட்டு, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது படிப்படியாக மழைநீர் வடிந்து வரும் நிலையில், சில இடங்களில் மழைநீர் மோட்டர் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, அமைச்சர்கள் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 50 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் அரிசி, பருப்பு, கோதுமை, பால், பிஸ்கெட், உணவு பொட்டலங்கள், குடிதண்ணீர் பாட்டில், பாய் மற்றும் போர்வை வழங்குவதற்கு, அமைச்சர் அவர்களின், அறிவுறுத்தலின்படி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்செந்தூர், பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை செல்லும் சாலையில் மழைநீரால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துப் பாதிப்பையும், சேதமடைந்த சாலைகளையும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள சாலையை உடனடியாக சீர்செய்யுமாறு மற்றும் சாலைகளில் தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றுமாறு அமைச்சர் அதிகாரிகளை அறிவுறுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக சாலைகள் உடனடியாக செப்பனிடும் பணி நடைப்பெற்று வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்ரீவைகுண்டம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய இடங்களில் மழைநீர் அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. இன்று அமைச்சர் , மழைநீர் அகற்றப்பட்டு விட்டதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நேரடியாகச் சென்று, பொது மக்களுக்குப் பால் பாக்கெட்களை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து புளியங்குடி கிராம மக்கள் அமைச்சர் அவர்களிடம், கிராமத்தை கடந்து செல்லும் பாலத்தை சீரமைத்துதரவும், வாய்க்காலை தூர்வாரவும் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் அக்கோரிக்கைகளை ஏற்று, அப்பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தினார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்கள், இச்சந்திப்பின்போது தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம், கடைகோடியில் இருக்க கூடிய ஸ்ரீவைகுண்டம் பகுதி மழைநீரால் சூழப்பட்டு, பல கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது என்றும், அரசின் சார்பாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட, மூன்று நாட்களாக தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக சென்றுக் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்ததை எடுத்துரைத்தார்கள்.

சாலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தற்காலிகமாக சீர்செய்யப்பட்ட விபரங்களையும், குறிப்பாக ஸ்ரீவைகுண்டம்-புதுக்கோட்டை சாலையில் மழைநீர் வடிந்து இருந்ததால், ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சாலையை சீர்செய்யப்பட்டு வருவதையும் விரிவாக எடுத்துரைத்தார்கள். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி ஆகிய இரண்டு ஒன்றியத்திற்கும் அதிகாரிகளையும் மற்றும் சாலைப் பணியாளர்களையும் நியமித்து, நிவாரண முகாம்களில் சமையல் செய்யும் இடங்களுக்கு, அரிசி, பருப்பு, காய்கறிகள், பால், பிஸ்கெட், பிரட், கோதுமை, ரவா ஆகிய நிவாரணப் பொருட்கள் இரண்டு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள். மேலும், இன்றயை தினத்தில் இருந்து, காலை 20 பஞ்சாயத்துகள், மாலையில் 20 பஞ்சயாத்துகள் என்று பிரித்து, 20 அதிகாரிகளை நேரிடையாக நியமித்தார்கள். மூலமாக, அரிசி, பருப்பு, கோதுமை, ரவா, சர்க்கரை, பிஸ்கெட், பிரட் மற்றும் குடிதண்ணீர் பாட்டில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பாக தயார் செய்து, 20 லாரிகளில், 20 பஞ்சாயத்துகளுக்கு காலையிலும், மாலையிலும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். சாலைகளைப் பொறுத்த வரையில், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள், மாவட்ட இதரச் சாலைகள் போன்ற சாலைகளை செப்பனிட, நான்கு கண்காணிப்புப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் விரைவாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரும் மற்றும் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர், தலைமை ப்பொறியாளர்கள் ஆகியோருடன் இணைந்து, ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் மீட்பு பணிகள், பராமரிப்புப் பணிகள், நிவாரணப் பணிகள் ஆகிய பணிகள் சரியாக நடைபெற்று வருகிறதா என்பதை அமைச்சர் ஆய்வு செய்து வருவதையும் விளக்கி கூறினார்கள்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், பொதுப்பணித்துறை சிறப்பு அலுவலர் இரா.விஸ்வநாத், மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் சென்று, நிவாரணப் பணிகளை செயல்படுத்துவதில் பேருதவி புரிந்தார்கள்.

Tags:    

Similar News