தலைமை காவலர் கொலை - சாராய வியாபாரிகளுக்கு இன்று தண்டனை அறிவிப்பு

கடந்த 2012ல் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு, 2021 திமுக ஆட்சியில் நடத்தப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டது போலீசாரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 4 சாராய வியாபாரிகளும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தண்டனைக்கான விவரங்களை அறிவிக்க உள்ளது.

Update: 2024-04-25 03:17 GMT

கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள் 

மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன்சந்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு காரில் சாராயம் கடத்தி சென்ற நான்கு பேரை நாகை மாவட்ட நடமாடும் சோதனை சாவடி பிரிவை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிங்காரம் தலைமையிலான போலீசார் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் விரட்டி சென்றனர். கொப்பியம் அரிகட்டி மதகு அருகில் சென்றபோது சாராயம் கடத்தி சென்ற காரை போலீசார் குழுவினர் நீண்ட தூரம் விரட்டிச் சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் தலைமை காவலர் ரவிச்சந்திரன்(45) காரை வழிமறித்துள்ளார்.

காரை ஓட்டிய மீன்சுருட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (54) என்பவர் காரை நிறுத்தாமல் தலைமை காவலர் ரவிச்சந்திரன் மீது காரை மோதியுள்ளார் . கீழே விழுந்த காவலர் மீது காரை விட்டு ஏற்றிவிட்டு நிற்காமல் தப்பி சென்றள்ளனர். மார்பு எழும்புகள் உடைந்து படுகாயமடைந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி சென்னை போரூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மீன்சுருட்டியை சேர்ந்த கலைச்செல்வன்(54), புளியம்பேட்டை கருணாகரன்(54), மீன்சுருட்டி சங்கர்(44), ராமமூர்த்தி(44) ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.  இவ்வழக்கு தொடர்பாக கும்பகோணம் கோர்ட்டில் ஆஜரானபோது கலைச்செல்வனுக்கு பதிலாக செல்வமும், கருணாகரனுக்கு பதிலாக செல்வக்குமாரும் ஆள்மாறாட்டம் செய்து கோர்டடில் ஆஜராகினர்.உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்கு பொய்யான தகவலை கூறி சரணடைந்துள்ளனர். 

இதனால் இவ்வழக்கில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரையும் கொலைவழக்கில் சேர்த்து வழக்கு பதிவு செய்தனர். 6 பேர் மீதான இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி நிறுத்திய 21 சாட்சிகள் பிறழ்சாட்சிகளின்றி சாட்சியம் அளித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையை சேர்ந்த தலைமை காவலரை பணியில் இருந்தபோது  வேண்டுமென்றே காரை ஏற்றி கொலை செய்ததால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை விதிக்க வேண்டுமென்று வாதிட்டார்.  இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி,  6 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். தண்டனைக்கான  தீர்ப்பை 25ஆம் தேதி  ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News