சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை- நவசண்டி யாகம் இன்று நிறைவு
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்;
Update: 2023-12-14 01:22 GMT
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நவசண்டி யாகம் இன்று நிறைவு
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது. ஊர் மக்களின் நலனுக்காகவும், நாட்டில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் பெருக வேண்டியும் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த 6-ந் தேதி நவசண்டி யாகம் தொடங்கியது. தினமும் பல்வேறு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. அதேபோல் தினமும் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வந்தது. கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கிடையே மண்டல பூஜையும், நவ சண்டி யாகமும் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது. இன்று இரவு 8 மணி அளவில் கோட்டை பெரிய மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வாணவேடிக்கை, நையாண்டி மேளத்துடன் வீதி உலா நடக்கிறது. அப்போது ராஜகணபதி கோவில், பட்டைக்கோவில் உள்ளிட்ட வீதிகள் வழியாக வலம் வந்து அம்மன் மீண்டும் கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா சிவராமகிருஷ்ணன், சுரேஷ்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.