தேர்தல் வருவதால் மோடி தமிழகம் வருகிறார் - அமைச்சர்

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களும் மணிப்பூராக மாறும்.புயல் அடித்தாலும், வெள்ளம் வந்தாலும், வராத மோடி தேர்தல் வருவதால் தமிழகத்திற்கு 8வது முறையாக வருகிறார் 2019 இல் இருந்து இந்தியாவில் பாஜக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. மோடிக்கு பாடி தான் ஸ்ட்ராங்காக இருக்கிறது, அஸ்திவாரம் ஆடத் துவங்கி விட்டது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Update: 2024-03-05 01:16 GMT

எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டம் 

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனை வாயில் எதிரே திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்திற்கு மோடி எத்தனை முறை வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. திமுகவிற்கு மோடி எம்மாத்திரம் என்றவர், மோடி திமுகவின் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களும் மணிப்பூராக மாறும் என எச்சரித்தார். பாஜகவினர் ஆன்மீகத்தை அரசியலாகப் பார்க்கின்றார்கள், நாங்கள் ஆன்மீகமாக பார்க்கிறோம்.

நீங்கள் இட ஒதுக்கீட்டை சலுகையாக பார்க்கின்றீர்கள், நாங்கள் சமூக நீதியாக பார்க்கின்றோம். நீங்கள் தமிழை மொழியாக பார்க்கிறீர்கள், நாங்கள் உயிராக போற்றுகின்றோம். நீங்கள் மதத்தின் பெயரால் மக்களை வேற்றுமைப்படுத்துகின்றீர்கள், நாங்கள் மொழியின் பெயரால் ஒற்றுமை ஏற்படுத்துகிறோம் என்றார். மேலும், புயல் அடித்தாலும், வெள்ளம் வந்தாலும், வராத மோடி தேர்தல் வருவதால் தமிழகத்திற்கு 8வது முறையாக வருகிறார் என்ற அமைச்சர், 2019 இல் இருந்து இந்தியாவில் பாஜக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. மோடிக்கு பாடி தான் ஸ்ட்ராங்காக இருக்கிறது, அஸ்திவாரம் ஆடத் துவங்கி விட்டதாக கூறினார்.

Tags:    

Similar News