கோவைக்கு சட்டவிரோத வெடிபொருள் கடத்தல் - 2.5 டன் பறிமுதல், விசாரணை
Update: 2023-11-30 08:36 GMT
போலீஸ் பாதுகாப்பு
தருமபுரியில் இருந்து கோவைக்கு சேலம் வழியாக வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வைக்கோல் ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் ஒன்றை போலீசார் சோதனை செய்த போது வைக்கோலுக்கு அடியே பெட்டி பெட்டியாக வெடிமருந்துகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தி கொண்டு வரப்பட்ட தலா 25 கிலோ எடை கொண்ட 100 ஜெலட்டின் ஜெல் பெட்டிகள், 950 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓட்டுநர் இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் வாகனம், நகரமலை அடிவாரத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் தளத்தில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.