லஞ்சம் வாங்கிய சர்வேயர், புரோக்கர் கைது

தஞ்சாவூரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய்துறை சர்வேயரையும் அவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.;

Update: 2023-11-30 12:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தஞ்சாவூரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய்துறை சர்வேயரையும் அவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

தஞ்சாவூர் கபிலன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக உறவினரான வைத்தியநாதன் என்பவர் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். இந்த இடத்தை அளவீடு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்ய, அந்த விண்ணப்பம் மீது விசாரணையை தஞ்சாவூர் வட்ட வருவாய்த்துறை சர்வேயருக்கு சென்றது. இதையடுத்து தஞ்சாவூர் வட்ட வருவாய் சர்வேயராக உள்ள ஆறுமுகம் மகன் ரமேஷ் (32) என்பவர் வைத்தியநாதனிடம் விசாரணைக்கு வருமாறு சில தினங்களுக்கு முன் கூறினார். இதைத் தொடர்ந்து வைத்தியநாதனியம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக ரமேஷ் கேட்டுள்ளார்.

Advertisement

அப்போது நான் கூறுபவரிடம் இந்த தொகையை கொடுக்குமாறு ரமேஷ் கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத வைத்தியநாதன் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். அவர்களது ஆலோசனையின் படி, நேற்று இரவு ரமேஷிடம் வைத்தியநாதன் பேசியபோது, தஞ்சாவூர் சுற்றுலா மாளிகை அருகே அம்மாபேட்டையைச் சேர்ந்த புரோக்கர் மகேந்திரன் (36) என்பவரிடம் லஞ்சப் பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார். அதே போல் மகேந்திரனிடம் பணம் கொடுத்ததும், அவர் தொலைபேசியில் ரமேஷூக்கு பணம் வாங்கிய தகவலை கொடுத்துள்ளார்.

பின்னர் வைத்தியநாதன் நான் ரமேஷை பார்க்க வேண்டும் என கூறியதும், மகேந்திரனும், வைத்தியநாதனும் அரண்மனை அருகே நின்ற ரமேஷை சந்தித்தனர். அப்போது வைத்தியநாதனிடம் வாங்கிய லஞ்சபணத்தை மகேந்திரன், ரமேஷிடம் கொடுத்த போது அங்கு தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, சரவணன் மற்றும் போலீஸார் கையும் களவுமாக இருவரையும் பிடித்து கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News