வாலிபர் வெட்டிக் கொலை: 3 பேர் கைது!
செய்துங்கநல்லூர் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Update: 2024-02-12 05:20 GMT
திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி அருகேயுள்ள பற்பநாதபுரத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் ஐயப்பன் என்ற சுரேஷ் (27). இவா், செய்துங்கநல்லூா் அருகே முத்தாலங்குறிச்சியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தாா். இவர் நேற்று செய்துங்கநல்லூரில் பொருள்கள் வாங்கிவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். செய்துங்கநல்லூா் சத்தக்காரன்பட்டி இசக்கியம்மன் கோயில் அருகே பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக செய்துங்கநல்லூா் காவல் ஆய்வாளா் பத்மநாபபிள்ளை வழக்குப் பதிந்து அதே கிராமத்தை சேர்ந்த ராஜ் மகன் அன்பு என்ற அன்பன் (23), மஜ்னு என்ற சிவபெருமாள் (19), நெல்லை சமத்துவபுரத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் கார்த்திக் பாண்டியன் (29) ஆகிய 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிவந்திபட்டியில் உள்ள கோவிலில் கொடை விழா நடந்த போது ஐயப்பன் என்ற சுரேஷுக்கும் 3 பேருக்கும் நடந்த தகராறில் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவந்திபட்டி போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் 3பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதனால் ஐயப்பன் என்ற சுரேசை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி நேற்று மதியம் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.