7 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தீமிதி  திருவிழா 

செந்துறை அருகே நமங்குணம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தீமிதி  திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-06-08 09:40 GMT

அரியலூர், ஜுன், 8- அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த  நமங்குணம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற திரௌபதி அம்மன்கோவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இக்கோயிலில் திருவிழா கடந்த 21 ந்தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், மாரியம்மன். திரவுபதி அம்மன், தருமர், பீமன், அர்ஜுனர், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர், அரவான் ஆகிய தெய்வங்களுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு,  வீதி உலாவும் நடைபெற்றது.

இவ்விழாவில்  புகழ்பெற்ற பூசாரிகளை கொண்டு மகாபாரதம் கதை படித்து தருமர் பிறப்பு, அர்ச்சுனன் பிறப்பு, அம்மன் பிறப்பு, அர்ச்சுனன் வில் வளைத்தல்,  அர்ச்சுனன் மாடு விரட்டுதல்,  திரௌபதி திருமணம் , பூச்செறிதல்,  அரவான் கடபலி உள்ளிட்ட 18 நாட்கள் நடந்த மகாபாரத போர் தினத்தை மண்டகப்படியாக அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வகையறாக்களும் திருவிழாவாக கொண்டாடி இறுதி நாளன்று  திரௌபதி அம்மனுக்கு வேண்டுதல்படி தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஏரிக்கரையில் இருந்து , பூங்கரகத்துடன் பம்பை, மேளம் நாதஸ்வரம் மங்கல இசையோடு முக்கிய வீதி வழியாக வந்த  பக்தர்கள் கோவில் அருகே அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தை சுற்றி  வலம் வந்து,  அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.

இதில் பெரியவர்கள் சிறியவர்கள் ஆண்கள் பெண்கள் மற்றும் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். விழாவில் ஊர் நாட்டார்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தீமிதி விழா கமிட்டியினர் பொதுமக்கள் பெரியோர்கள் செய்தனர்.

Tags:    

Similar News