தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

தென்சென்னையின் இரயில்வே துறை சார்ந்த தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-28 10:20 GMT

தமிழச்சி தங்கபாண்டியன் 

இன்று (28.03.2024), தியாகராயர் நகரில், 142-வது வட்டத்திற்கு உட்பட்ட சி.ஐ.டி நகரில், போக் சாலை, சாதூல்லா ரோடு, வ.உ.சி தெரு, மேட்லி தெரு, காமராஜர் காலனி, பர்கிட் ரோடு, மன்னார் தெரு, தாமோதரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர்.த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்டச் செயலாளர் மயிலை திரு.த.வேலு எம்.எல்.ஏ, தலைமையில் வாக்கு சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், கடந்த மூன்று நாட்களாக வாக்கு சேகரித்து வருகிறேன்; செல்கின்ற இடமெல்லாம் பொதுமக்களும், கழகத்தினரும், தோழமைக் கட்சியினரரும் அளிக்கும் வரவேற்பையும், அன்பையும், எழுச்சியையும் பார்கின்ற போது, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார். நீங்கள் இரயில்வே துறையில் தொகுதிக்காக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தொகுதி முழுவதும் உள்ள இரயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக நான் 2019-ல் வெற்றி பெற்றது முதல் 2024 வரை அவ்வபோது ஆய்வு மேற்கொண்டு தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு குறைகளை மனுவாக அளித்துள்ளேன்.

ZRUCC கூட்டம் அனைத்திலும் கலந்துகொண்டு, தொகுதிக்குட்பட்ட அனைத்து‌ இரயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக பேசியுள்ளேன். அதன் விளைவாக மாம்பலம், சைதாப்பேட்டை இரயில் நிலையங்களில் பழுதடைந்த மேற்கூரை மாற்றப்பட்டது, தரமணி இரயில் நிலைய சாலையில் ரூ.1 கோடி 68 இலட்சம் மதிப்பீட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன, மயிலாப்பூர் முண்டக்கன்னியம்மன் கோவில் இரயில் நிலையத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நுழைவு வாயில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது; வேளச்சேரி - புனித தோமையர் மலை MRTS இணைப்பிற்காக, பாராளுமன்றத்தில் பலமுறை பேசியும், ரயில்வே அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்ததன் காரணமாக, நிலம் கையகப்படுத்துதல் முடிக்கப்பட்டு, பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது; மெட்ரோ இரயில் குறித்தும் பல முறை நாடாளுமன்றத்தில் குரல்‌ கொடுத்திருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News