சிறுத்தை தாக்கி மூன்று வயது சிறுமி உயிரிழப்பு.

பந்தலூர் அருகே தனது தாயுடன் சென்ற வட மாநில சிறுமியை தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாக்கி இழுத்து இழுத்து சென்றதில் காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-01-07 04:00 GMT
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள ஏலமன்னா கிராமத்தில் கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வரும் சிறுத்தையால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க ஆறு கூண்டுகளும், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க இரண்டு வனக்கால்நடை மருத்துவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள கிராமப் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் சென்ற வட மாநில சிறுமியை திடீரென தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாயின் கண் முன்னே சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. உடனே தாயின் அலறல் சத்தத்தை கேட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர் பின்பு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சிறுத்தையின் தாக்குதல் காரணமாக ஏற்கனவே ஒரு பழங்குடியின பெண் உயிரிழந்த நிலையில் இன்று இரண்டாவது உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது தற்போது சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் சிறுத்தையை பிடிக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
Tags:    

Similar News