விவசாயிகள் மீதே குண்டர் சட்டமா? என்னதான் நடக்கிறது? - அன்புமணி

விவசாயிகள் மீதே குண்டர் சட்டமா? இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-11-23 01:42 GMT

பாமக போராட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேல்மா கூட்ரோட்டில் நடைபெற்றது.

இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டன உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது,” 2700 ஏக்கர் பட்டா விளை நிலங்களை கையகப்படுத்தும் திட்டம் ரத்து செய்ய வேண்டும். பின்தங்கிய மாவட்டமாக இருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும். ஆனால் விளை நிலங்களை அழித்து வேலை வாய்ப்பு என்றால் அந்த வேலை வாய்ப்பு தேவையே இல்லை. விளைநிலங்களை அழிக்க முயற்சிக்கிறீங்களே உங்களுக்கு மனசாட்சி இல்லையா ? இதை ஒருபோதும் பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. இதுதான் பாட்டாளி மக்கள் கட்சி கொள்கை முடிவு. எட்டு வழி சாலைக்காக முதலில் போராடியவன் நான், நீதிமன்றத்திலும் நான் போராடியதால் இப்போது அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. நாங்கள் என்ன பாவம் செய்தோம் எங்களுடைய நிலங்களை விட்டு விடுங்கள். விளை நிலங்களை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை. நிலங்களுக்கு இழப்பீடாக கொடுக்கும் பணம் டாஸ்மார்க்குக்குதான் போகும். எனவே விளைநிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம் அதை நாங்கள் தைரியமாக எதிர்ப்போம். விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தினை பதிவு செய்துள்ளனர். இந்த நாட்டில் என்ன நடக்கிறது..? நமக்கு சோறு போடும் கடவுள் விவசாயிகள், அவர்கள் மீது குண்டாசா..? கஞ்சா வைத்திருப்பவர்கள் ஊரை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சொந்த நிலத்திற்காக, விளைநிலத்திற்காக போராடும் விவசாயிகள் மீது குண்டர் சட்டமா.? குண்டர் சட்டம் போடப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் ஐம்பது ரூபாய் , அறுபது ரூபாய் என ஒரு மூட்டைக்கு லஞ்ச வாங்குகின்றனர். நூறாண்டுகளில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையோடு செயல்படக்கூடிய கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி அடுத்த தலைமுறைக்காக பாடுபடக் கூடிய கட்சி. விவசாய நிலங்களை கையகபடுத்தமாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறிய திமுக தற்போது தலைகீழாக செயல்படுகிறது. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இனி நாங்கள் விளைநிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம்.” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Tags:    

Similar News