தியாகராஜசுவாமிகள் ஆராதனை விழா - பஞ்சரத்தன கீர்த்தனைகளை பாடி இசையஞ்சலி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நேற்று தியாகராஜ சுவாமிகள் 177-வது ஆராதனை விழாவில் ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் பஞ்சரத்தன கீர்த்தனைகளை பாடி தியாகராஜ சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தினர். 

Update: 2024-01-31 14:28 GMT
தியாகராஜர் ஆராதனை விழா

 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பகுலபஞ்சமி தினத்தில் தியாகராஜசுவாமிக்கு ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டு 5 நாட்கள் விழாவாக தியாகராஜ சுவாமிகளின் 177 ஆவது ஆராதனை விழா கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து நாள்தோறும் இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு பாடியும், இசைக்கருவிகளை இசைத்தும் தியாகராஜசுவாமிகளுக்கு இசையஞ்சலி செலுத்தி வந்தனர்.

ஆராதனை விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலையில் தியாகராஜ சுவாமி வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி வழியாக சந்நிதியை சென்றடைந்தது.   பின்னர், காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து 9 மணியளவில் பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது.

தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது.  பின்னர் கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, நித்யஸ்ரீ மகாதேவன், ஓ.எஸ்.அருண், கடலூர் ஜனனி, அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட ஏராளமான அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.  அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் தியாக பிரம்ம மகோத்சவ சபாவின் அறங்காவலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வெளிநாட்டினர் ஆர்வம்: தியாகராஜர் ஆராதனை விழாவின் போது போலந்து நாட்டிலிருந்து வந்திருந்த 20 சுற்றுலாப் பயணிகள் இசைநிகழ்ச்சி நடைபெற்ற பந்தலுக்கு வந்தனர். அவர்கள் அங்கு, இசைக்கலைஞர்களின் ஒரே நேரத்தில் பாடும் இசையை பார்த்து, ரசித்து அதனை தங்களுடைய கேமராக்களில் படமாக பதிவு செய்தனர். பஞ்சரத்தன கீர்த்தனையை தொடர்ந்து பல்வேறு இசைக்கலைஞர்கள் ஹரிகதை, பாட்டு, புல்லாங்குழல், நாகசுரம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர். இறுதியாக நேற்று இரவு 10.40 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.

Tags:    

Similar News