Flood Relief Fund: சென்னையில் யாருக்கெல்லாம் ரூ.6000 வரும் தெரியுமா.?

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதில் யாருக்கெல்லாம் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Update: 2023-12-13 17:28 GMT

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடந்த வாரம் மிக்ஜாம் புயலால் கொட்டித்தீர்த்த பெருமையில் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஒரு வாரம் கடந்த பின்பும் சில இடங்களில் மழைநீர் வடியாமல் இருந்து வருகிறது. மழை வெள்ளத்திற்கு 25 பேர் உயிரிழந்த நிலையில், கால்நடை உயிரிழப்பு, பொருட் சேதம், வாகனங்கள் பழுது, வாழ்வாதாரம் இழப்பு உள்ளிட்டவை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்குமா என்ற கேள்வி எழுந்து வந்தது. எதிர்கட்சிகளும் மழை வெள்ளம் நிவாரணதொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தின. 

இந்த நிலையில் கனமழை நிவாரண தொகையை தமிழக அரசு அறிவிவித்தது. அதில், “ மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்; எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்; வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000/- என்றிருந்ததை, ரூ.4,000/- உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 லட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது​” என அறிவிக்கப்பட்டது. 

​மழை, வெள்ளம் நிவாரண தொகை யார், யாருக்கு கிடைக்கும் என்ற குழப்பம் ஏற்பட்ட நிலையில், நிவாரண தொகை குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில், சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்திலும், ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் வட்டங்களிலும் நிவாரணத்தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்களை இழந்த குடும்பங்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்படும். ஒன்றிய மற்றும் மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்புகளின் விவரங்களை வங்கி கணக்குடன் தங்களது அருகில் இருக்கும் நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம். 

நியாயவிலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கமாக பணம் வழங்கப்படும். கூட்ட நெரிசலை தடுக்க டோக்கன் வழங்கப்பட்டு அதனடிப்படையில் நிவாரணத் தொகை வழங்கப்படும். அதற்கான விண்ணப்பங்கள் நியாயவிலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். நிவாரண தொகைக்கு பெறப்படும் விண்ணப்பங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தப்பின்னர் அவர்களுக்கான தொகை வங்கி கணக்கிற்கு வந்தடையும்” என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News