இரட்டை ரெயில் பாதை திட்டம் - பிரதமர் இன்று துவக்கி வைப்பு

ரூ.319.68 கோடியில் சேலம் மேட்டூர் அணை இடையே இரட்டை ரெயில் பாதை திட்டம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

Update: 2024-01-02 04:35 GMT

பிரதமர் மோடி 

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டூருக்கு ஏற்கனவே ஒருவழி ரெயில்வே பாதை உள்ளது. இந்த பாதையில் ஈரோடு,மேட்டூர் ரெயில் சேலம் வழியாக தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியும், தனியார் நிறுவனத்திற்கு இரும்புகளும் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சேலம்மேட்டூர் அணை இடையே இரட்டை அகல ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் 2011,2012ம் ஆண்டு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து முதற்கட்டமாக ரூ.187.26 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து திட்ட மதிப்பீடு 319.68 கோடியாக அதிகரிக்கப்பட்டது. அதன்பிறகு 2020ம் ஆண்டு மேச்சேரியில் இருந்து மேட்டூர் அணை வரைக்கும் 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியது. அந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து ஓமலூரில் இருந்து மேச்சேரி வரைக்கும் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2021ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.

இதையடுத்து சேலத்தில் இருந்து மேக்னசைட் வரைக்கும் இரட்டை அகல ரெயில்பாதை அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிலையில், திருச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சேலம் மேக்னசைட் சந்திப்பு ஓமலூர் மேட்டூர் அணை இடையே 41.4 கிலோ மீட்டரில் அமைக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் சேலம் மேட்டூர் அணை இடையே சரக்கு போக்குவரத்து விரைவாக சென்றடையும். ரெயில் பயணம் நேரமும் மிச்சமாகும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News