அமித்ஷா இன்று இரவு கோவை வருகை: கண்காணிப்புகள் தீவிரம்!!
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று கோவை வருகிறார்.;

அமித்ஷா
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று கோவை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு வரும் அவர் இரவு 9 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து இறங்குகிறார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். அங்கிருந்து கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு கொங்கு மண்டல முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில்அதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். நாளை (26-ந்தேதி) காலை கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டள்ள பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அங்கிருந்தவாறே ராமநாதபுரம், நெல்லை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகங்களையும் அவர் காணொலி மூலம் திறந்துவைக்க உள்ளார். பின்னர் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் கோவை உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் 1000 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிகளில் மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். கட்சி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். அங்கு தியான லிங்கம், லிங்க பைரவியை வழிபட்டு விட்டு ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் மகாசிவராத்திரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் கோவை வரும் அமித்ஷா இரவில் ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி திரும்புகிறார். அமித்ஷா கோவை வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை வரும் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்துள்ளன. இதனால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கோவை விமான நிலையம், அவர் ஓய்வெடுக்கும் நட்சத்திர ஓட்டல், புதிய பா.ஜ.க. அலுவலகம், ஈஷா யோகா மையம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.