ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வார்டு உறுப்பினர் தர்ணா
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி தீர்த்தது, இதன் காரணமாக மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது, மழை நின்ற பின் ஆங்காங்கே தேங்கி நின்ற மழை நீரை ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மரக்காணம் அடுத்து சிறுவாடி ஊராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டில் உள்ள உசேன் நகர் பகுதியில் மழை நின்று இரண்டு தினங்கள் ஆகிய பின்னும் தெருவில் மழை நீர் நின்றுள்ளது, இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள மக்கள் 7-வது வார்டு உறுப்பினர் அப்பாஸ் கான் அவர்களிடம் முறையிட்டுள்ளனர், இதனை தொடர்ந்து அவர் சிறுவாடி ஊராட்சி மன்ற தலைவர் சத்யா தில்லைபாபுவிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரையிலும் தண்ணீர் அகற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை இந்த நிலையில் இதை கண்டித்து இன்று 7-வது வார்டு உறுப்பினர் அப்பாஸ் கான் உசேன் நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார், இதனை அடுத்து அங்கு இருந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழைநீர் தேங்கி நின்றதை கண்டித்து வார்டு உறுப்பினர் மழை நீரில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்தும் ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே வார்டு உறுப்பினர் அப்பாஸ் கான் தனது சொந்த செலவிலேயே ஜேசிபி எந்திரம் மூலம் தேங்கி நின்ற மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.