முதல்வர் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை ? - செல்லூர் ராஜு

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எப்படி கெஜ்ரிவால் சிறையில் உள்ளாரோ, அதேபோல முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுபான கொள்முதல் ஊழலில் சிறைக்கு செல்வார், பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

Update: 2024-07-03 07:07 GMT

செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு 

மதுரை பரவை சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஊர்மெச்சிக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறுகையில் "திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகி உள்ளது, நான் பல்வேறு தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கை விடுத்து வருகிறேன், நான் விடுக்கும் கோரிக்கை செவிடன் காதில் ஊதும் சங்கை போல கிடப்பில் போடப்பட்டது, மூன்று ஆண்டுகளாகியும் திமுக தொகுதிகளுக்கு எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் செய்து தரவில்லை, சட்டமன்ற தொகுதி வாரியாக 10 நிலுவைத் திட்டங்கள் குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதினோம்.

10 நிலுவை திட்டங்களில் 1 ஒரு திட்டத்தை கூட முதலமைச்சர் நிறைவேற்றி தரவில்லை, தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை செய்து தராமல் மக்களிடம் எம்எல்ஏக்களை திமுக அரசு பழிகாடாக மாற்றுகிறது, மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கக்கூடிய அம்ருத் குடிநீர் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது, மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்தவொரு பயனும் இல்லை, தமிழக அரசிடம் பேசி திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் முன் வரவில்லை, அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறவில்லை, கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி தரவில்லை.

கள்ளச்சாராய மரணங்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முழு பொறுப்பு, கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஏன் நேரில் செல்லவில்லை, கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விதி எண் 56 படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதற்கு அனுமதிக்கவில்லை, ஆனால் விதி எண் 56 படி இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசி உள்ளார், சட்டம், விதிமுறைகள் அனைவருக்கும் சமம் தானே, அப்புறம் எப்படி முதலமைச்சர் சட்டப்பேரவையில் முதல்வர் பேசியுள்ளார், தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார், கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது, மடியில் கனமில்லை என்றால் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யலாமே சட்டப்பேரவை கண்ணியத்தை காக்கும் விதமாக கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து வெளியேறினோம்.

நாங்கள் எங்களுடைய சட்டைகளை கிழித்துக்கொண்டு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறவில்லையே?, அரசு விற்பனை செய்யும் மதுபானத்தில் கிக்கு இல்லையே என அமைச்சர் துரைமுருகன் பேசியது அமைச்சருக்கு அழகில்லை, திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என கூறுவதற்கு பதிலாக கள்ளச்சாராய ஆட்சி, போதை பொருள் ஆட்சி என கூறலாம், அரசு மதுபானங்கள் கொள்முதலில் வெளிப்படை தன்மைகளுடன் நடந்து கொள்ளவில்லை என தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எப்படி கெஜ்ரிவால் சிறையில் உள்ளாரோ அதேபோல முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுபான கொள்முதல் ஊழலில் சிறைக்கு செல்வார், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கொள்முதல் ஊழல் தொடர்பாக முதல்வர் உட்பட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுப்போம், பிரதமர் மோடி மணிப்பூருக்க ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே?.

16 பேர் உயிரிழந்துள்ளதால் சம்பவ இடத்திற்கு பிரதமர் நேரில் வர வேண்டுமென விதி உள்ளது, கள்ளக்குறிச்சிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்திருக்க வேண்டும், நல்ல தலைவர்கள் இல்லை என விஜய் சொன்னதன் அர்த்தம் வேறு, மாணவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் அப்படி சொல்லியுள்ளார், சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாரா?, சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடும், திமுக ஆட்சியில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் போதைக்கு அடிமையாகி விட்டார்கள், திமுக ஆட்சியில் சட்டங்கள் எழுத்துக்களாகவே மட்டும் உள்ளது, பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாட்டில் சென்று கல்வி கற்க உள்ளதற்கு என்னுடைய வாழ்த்துக்கள், அண்ணாமலை வெளிநாட்டில் நன்றாக கல்வி கற்று தமிழகத்திற்கு வர வேண்டும், தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் அண்ணாமலை கற்று வரவேண்டும்" என கூறினார்

Tags:    

Similar News