பணிபுரியும் இடத்தில் இடைவேளையின் போது உடலுறவு கொள்ளுங்கள்; புதின் கருத்தால் வெடித்த சர்ச்சை!!

பணிபுரியும் இடத்தில் இடைவேளையின்போது உடலுறவு கொள்ளுமாறு ரஷியர்களுக்கு புதின் வலியுறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-09-17 08:52 GMT

ரஷ்ய அதிபர் புதின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வேலை செய்யும் இடங்களில் சாப்பாடு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையை உடலுறவுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு ரஷிய மக்களுக்கு புதின் வலியுறுத்தியதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவின் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. உக்ரைனுக்கு எதிராக போர் நடத்தி வரும் ரஷியாவுக்கு இது மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது. இதனால் மக்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய முன்னோர்கள் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற வரலாறு உண்டு என ரஷிய அதிபர் புதின் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் பணிபுரியும் இடத்தில் இடைவேளையின்போது உடலுறவு கொள்ளுமாறு ரஷியர்களுக்கு புதின் வலியுறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவில் தற்போதுள்ள மக்கள் தொகை அப்படியே நிலைத்திருக்க ஒரு பெண்ணுக்கு 2.1 என்ற சதவீதம் என்ற அளவில் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால் தற்போது இது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது. 1999-க்கும் பிறகு தற்போது ரஷியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஜூன் மாதம் ஒரு லட்சத்திற்கும் குறைவான குழந்தைகள்தான் பிறந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு முதல் பாதியில் பிறந்த குழந்தைகளை விட தற்போது 2024 முதல் பாதியில் 16 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக ரஷியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் உக்ரைன் சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் 49 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் தொகை வீழ்ச்சி 18 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு மருத்துவ சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. செல்யாபின்ஸ்க் பிராந்தியம் 24 வயதிற்கு உட்பட்ட பெண் மாணவிகள் குழந்தை பெற்றுக் கொண்டால், முதல் குழந்தைக்கு 8500 டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. கருத்தடைக்கு கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தட்யான்யா புட்ஸ்கயா முதலாளிகள் அவர்களுடைய பெண் ஊழியர்களை குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க வலியுறுத்தும் கொள்கைக்கு பரிந்துரை செய்துள்ளார். அரசியல்வாதியான அன்னா குஸ்னெட்சோவா, பெண்கள் 19 அல்லது 20 வயதில் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குடும்பம் மூன்று அல்லது அதற்கு மேலான குழந்தைகளை பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, "ரஷிய மக்களைப் பாதுகாப்பதே எங்கள் மிக உயர்ந்த தேசிய முன்னுரிமை. ரஷ்யாவின் தலைவிதி... நம்மில் எத்தனை பேர் இருப்போம் என்பதைப் பொறுத்தது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி" புதின் கூறியிருந்தார். உக்ரைன் உடனான போரால் ரஷியாவில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் நாட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Tags:    

Similar News