அரசு மருத்துவமனையில் பைனான்ஸ் ஊழியர் மிரட்டும் வீடியோ வைரல்!
திருப்பூரில் பணம் கொடுத்தால்தான் செல்வேன் என மகனுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாயை பணம் கேட்டு தனியார் பையனாஸ் ஊழியர் மருத்துவமனைக்கு உள்ளே கட்டாயப்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
Update: 2024-03-29 08:42 GMT
பணம் கொடுத்தால் தான் செல்வேன் என மகனுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாயை பணம் கேட்டு தனியார் பைனான்ஸ் ஊழியர் மருத்துவமனைக்கு உள்ளே கட்டாயப்படுத்தும் வீடியோ தற்சமயம் வைரலாகி வருகிறது. பாமாவதி என்ற பெண் கோவையில் இருந்த பொழுது ஜனலக்ஷ்மி என்ற பைனான்ஸ் நிறுவனத்தில் மகளிர் குழு கடன் வாங்கியுள்ளார். ஒரு லட்ச ரூபாய் வாங்கிய நிலையில் வேலை காரணமாக திருப்பூருக்கு இடம் மாறுதல் ஆகி குடும்பத்துடன் தங்கியிருந்து பேக்கரியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது மகன் வினித்குமார் கடன் தொல்லை காரணமாகவும் , பைனான்ஸ் ஊழியரின் தொடர் தொந்தராவாலும் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இந்நிலையில் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பாமாவதி சிகிச்சை பெற்று வரும் நிலையில் உடனிருந்து மகனை பார்த்து வருகிறார். இந்த மாதத்திற்கான தவணை 20 ஆம் தேதி செலுத்த வேண்டிய நிலையில் தாமதமாகி விட்டதாக கூறி மருத்துவமனைக்கு வந்து பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர் தவணை வசூலை தர வேண்டும் என கட்டாயப்படுத்தும் வீடியோ காட்சிகள் தற்சமயம் வைரலாகி வருகிறது. மேலும் மகனை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளோம் , சனிக்கிழமை பணம் தருகிறோம் என கோரியும் பைனான்ஸ் ஊழியர் சூர்யா செல்லாமல் மருத்துவமனையிலேயே அவர்களுக்கு முன்பாக நின்று கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.