”எனக்கு எம்பி சீட் தான் வேணும்” - அடம்பிடித்து பாஜகவில் இணையும் விஜயதரணி?

எம்பி சீட் தராததால் காங்கிரஸ் மீது அப்செட்டில் இருக்கும் விஜயதாரணி கட்சி தாவல்

Update: 2024-02-17 07:50 GMT
காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி

Vijayadharani: 20 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸில் இருந்த விஜயதரணி, அக்கட்சியில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விஜயதரணி. சட்டமன்ற உறுப்பினராக மட்டும் இல்லாமல், தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் முதன்மை கொறடா, கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விஜயதரணி வகித்து வந்தார். இப்படி பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தாலும், விஜயதரணிக்கு நீண்ட நாட்களாக மாநில அரசையும் தாண்டி டெல்லி மீது ஒரு கண் இருந்துள்ளது.

இதனால், தமிழத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதை காட்டிலும் டெல்லியில் எம்பியாக வலம் வருவதை விரும்பிய விஜயதரணி, கடந்த 1999ம் ஆண்டு முதல் தனக்கு எம்பி சீட் வேண்டும் என கேட்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸில் வெற்றிப்பெற்றிருந்த வசந்தகுமார், கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

ஏற்கெனவே, எம்பி சீட் மீது விருப்பம் கொண்டிருந்த விஜயதரணி, வசந்தகுமார் இறந்ததால், அந்த தொகுதிக்கு காங்கிரஸில் தான் போட்டியிட வேண்டும் என விரும்பினார். தனக்கு அந்த வாய்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் விஜயதரணி பேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் தலைமையோ வசந்தகுமாரின் இடத்தை நிரப்ப வேறொரு திட்டம் போட்டது. கன்னியாகுமரி தொகுதியில் அனுதாப ஓட்டு பெற திட்டம் போட்ட காங்கிரஸ் தலைமை, வசந்தகுமாரின் மகனான விஜய் வசந்திற்கு வாய்ப்பு கொடுத்தது. நினைத்தது போலவே, கன்னியாகுமரி தொகுதியில் அனுதாப ஓட்டில் விஜய் வசந்த் வெற்றிப்பெற்றார். இதனால், அப்செட்டான விஜயதரணி காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது மக்களை தேர்தல் நடைபெற உள்ளதால் இம்முறை வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதில் விஜயதரணி கராராக இருந்துள்ளார். ஆனாலும், இந்த முறையும் விஜயதரணிக்கு எம்பி சீட் கிடைக்காது என்று சொல்லப்படுகிறது. கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமாரை தொடர்ந்து விஜயவசந்த குமாருக்கு அதிக ஆதரவு இருப்பதால், அவருக்கே மீண்டும் வாய்ப்புகள் வழங்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக பேச்சுகள் அடிப்படுகிறது.

இதனால், ஓவர் அப்செட்டான விஜயதரணி கட்சி தாவும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட பங்கேற்காத விஜயதரணி, டெல்லியில் முகாமிட்டுள்ளார். டெல்லியை விடாபிடியாய் பிடித்து கொண்டிக்கும் அவர், பாஜகவில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமையில் விஜயதரணி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்படி பாஜகவில் விஜயதரணி இணைந்தால், கன்னியாகுமரி தொகுதியில் எம்பி சீட்டுக்காக விஜயதரணி போட்டியிடுவார். அப்படி போட்டியிட்டாலும் எம்பி-யாகி நாடாளுமன்றத்தில் தனக்கான இருக்கையை அவர் எட்டிப்பிடிப்பாரா என்பது கேள்விக்குறி தான் என அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றன. 

Tags:    

Similar News