மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம் - மனைவியின் வீட்டிற்கே சென்று சரமாரியாக வெட்டி கொன்ற கணவன்

மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்

Update: 2024-07-26 14:07 GMT
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம் - மனைவியின் வீட்டிற்கே சென்று சரமாரியாக வெட்டி கொன்ற கணவன் ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன், மனைவியின் வீட்டிற்கு நேரில் சென்று சரமரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ்(27). ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பானாவரம் அடுத்த பாறைமேடு பகுதியை சேர்ந்த சந்தியா(22) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், பேரரசி(2) என்ற பெண் குழந்தை உள்ளது. ஓம் பிரகாஷ்க்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருப்பதாகவும், சிறிதாக ஆரம்பித்த இந்த பழக்கம் நாளடைவில் அதிகரித்துள்ளது.  இதனால் கஞ்சா தொடர்பான வழக்குகளில் திருத்தணி காவல் நிலையத்தில் சிக்கிய ஓம் பிரகாஷை, சந்தியாவின் உறவினர்கள் சிறையிலிருந்து வெளியே அழைத்து வந்துள்ளனர். அதே போல கஞ்சா தொடர்பான புகார்கள் மட்டுமின்றி, கொலை முயற்சி, இருசக்கர வாகன திருட்டு என மொத்தம் 4 வழக்குகள் அவர் நிலுவையில் உள்ளதால் சரித்திர பதிவு குற்றவாளியாக சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ஓம் பிரகாஷின் இந்த நடவடிக்கையால் மனம் உடைந்த சந்தியா அவ்வப்போது கணவருடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமாக அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதமும், தகராறும் ஏற்படுவது வாடிக்கையாகவே இருந்து வந்துள்ளது.  இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சந்தியா தனது இரு வயது குழந்தையுடன் மாணவரத்தில் உள்ள தனது அம்மாவின் வீட்டிற்கு வந்துள்ளார். மனைவியிடம் ஓம்பிரகாஷ்,  செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போது அதனை சந்தியா தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஓம்பிரகாஷ் இன்று பனாபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு யாரும் எதிர்பாராத சமயத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென மனைவி சந்தியாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சந்தியா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பானவரம் போலீசார் மற்றும் அரக்கோணம் ஏ.டி.எஸ்.பி.வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்து சந்தியாவின் உடலை கைப்பற்றிய பிரத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ததோடு, ஓம் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியார் வீட்டிற்குள் நுழைந்து, கட்டிய மனைவியை கணவனே வெட்டி படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News