காவிரி ஆற்றில் மீனவரிடமிருந்து பரிசல் பறிமுதல் செய்த போலீசார்

எச்சரிக்கையை மீறி காவிரி ஆற்றில் பரிசலுடன் செல்ல முயன்ற மீனவரிடம் பரிசலை பள்ளிபாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர்

Update: 2024-08-02 13:08 GMT
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு ,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.  காவிரி ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் ஓடுவதால், முன் பாதுகாப்பு நடவடிக்கையாக, காவிரி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, நீரில் இறங்கவும், செல்பி எடுக்கக் கூடாது என மாவட்ட சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியில் ,மீனவர் ஒருவர் தன்னுடைய பரிசல் மூலமாக இன்னொரு பகுதியில் உள்ள பரிசலை எடுத்து வருவதற்காக  காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை அன்று மதியம் இறங்க முயன்றார். இதனை கண்ட பள்ளிபாளையம் போலீசார் அவரை கடுமையாக எச்சரித்து ,அவரிடம் இருந்து பரிசலை பறிமுதல் செய்தனர்..காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்காத வண்ணம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News