பிரதான சாலை துண்டிப்பால் போக்குவரத்து பாதிப்பு

சாக்கடை கால்வாய் அமைப்பு பணிகள் தாமதத்தால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2024-08-22 15:04 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பாதிப்புகளை குறைக்கும் வகையில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது 90 சதவீதமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது .இந்த பணிகளின் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து  தனியார் காகித ஆலை சாலை வழியாக திருச்செங்கோடு செல்லும் சாலையான ஆர்.எஸ்.ரோடு பிரிவு சாலை எனும் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக பாலக்கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக  சாலையில் பள்ளம் தோண்டி, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் . ஒரு சில தினங்களில் பணிகள் நிறைவு பெறுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு மேலாகியும் பணிகள் நிறைவு பெறாத நிலை உள்ளது. மேலும் இதன் காரணமாக காகித ஆலை சாலை வழியே உள்ள வசந்த நகர், காவேரி ஆர்.எஸ், புதுப்பாளையம், தாஜ்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கல்லூரி மாணவ, மாணவியர் ,பள்ளி சென்று வரும் மாணவ, மாணவியர் இந்த ஒரு  சாலையை பயன்படுத்தி தான் பள்ளிபாளையம் பிரதான சாலைக்கு வந்து சென்றனர். தற்போது இந்த சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் தினந்தோறும் மாணவ மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர் . அது மட்டும் இன்றி சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதால் ,போதிய பயணிகள் இல்லாததால் துண்டிக்கப்பட்ட சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டு விடுகிறது. அப்படியே பேருந்து சென்றாலும் ஒரு சில பயணிகளை மட்டுமே ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது . எனவே போர்க்கால அடிப்படையில் சாக்கடை கால்வாய் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து தார் சாலை அமைத்து மீண்டும் பழையபடி சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேம்பால பணிகள் கட்டுமான ஒப்பந்ததாரர் இது குறித்து தெரிவிக்கும் பொழுது, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுவிட்டது .சுற்றிலும் தார் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் மீதமிருப்பதால்,ஒரு சில தினங்களில்  அந்தப் பணிகள் முடிவுற்ற பிறகு மீண்டும் பழையபடி சாலையில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தனர்.

Similar News