பிடிபட்ட காளியம்மன் கோவில் கொள்ளை முயற்சி நபர்

குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர் பிடிபட்டான்.

Update: 2024-09-14 08:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர் பிடிபட்டான். இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மாசித்திருவிழாவில் மகா குண்டம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, வாண வேடிக்கை என களைகட்டும் திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரளும் கோவில் ஆகும். இந்த கோவிலின் அர்ச்சகர் சதாசிவம், 35, நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் 06:00 மணியளவில் கோவில் திறக்க வந்தார். கோவிலின் பக்கவாட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, உண்டியலின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பணம் திருடப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் செய்ததின் பேரில் குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் பவானி போலீசில் குற்ற சம்பவம் தொடர்பாக சித்தோடு பகுதியை சேர்ந்த கோபிநாத், 38, என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் விசாரணை செய்த போது, குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து திருட முயற்சி செய்தது இவன்தான் என்பது தெரியவந்தது. இவனிடம் குமாரபாளையம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News