நியாய விலைக் கடைகளில் கருவிழி பதிவு தீவிரம் திட்டம் பற்றி கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, நியாயவிலைக் கடையை பார்வையிட்டு, கருவிழி இயந்திரம் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்;

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 634 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில், 414 முழு நேர நியாய விலைக்கடைகள் மற்றும் 220 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில், 2016 ஆகஸ்ட் மாதம் முதல், மின்னணு விற்பனை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு, 2019ம் ஆண்டு, அக்டோபர் முதல், கைரேகை பதிவு முறை செயல்பாட்டில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், 46 முழு நேர நியாயவிலைக் கடைகளுக்கும், குன்றத்துார் தாலுகாவில் 29 முழு நேர நியாயவிலை கடைகளுக்கும் மொத்தம் 75 முழு நேர நியாயவிலைக் கடைகளில் சோதனை முறையில், கருவிழி பதிவு செய்யும் முறை நடைபெற்று வருகிறது. கருவிழி பதிவு செய்யும் முறையை நியாயவிலைக் கடைகளில் செயல்படுத்துவதால், போலி பட்டியல்கள் வாயிலாக பொதுவிநியோகத் திட்ட உணவு பொருட்கள் வெளிநபர்களுக்கு வழங்குவது தடுக்கப்படும். இதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பும் தடுக்கப்படும். மாவட்டம் முழுதும் இத்திட்டம் அமல்படுத்தும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையை பார்வையிட்டு, கருவிழி இயந்திரம் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். பின், விளக்கடி கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, குழந்தைகளின் கற்றல் திறனை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.