சாலையோரத்தில் நெல்லை கொட்டி உலர்த்துவதால் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
நெடுஞ்சாலையோரத்தில் நெல்லை கொட்டி உலர்த்துவதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், சிறுங்கோழி பகுதியில், புக்கத்துறை நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை பயன்படுத்தி, தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சிறுங்கோழி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தற்போது, நவரை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. அவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல்லை, அங்குள்ள நெற்களத்தில் கொட்டி உலர்த்த போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் புக்கத்துறை நெடுஞ்சாலையோரத்தில் நெல்லை கொட்டி உலர்த்தி வருகின்றனர். இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து, புக்கத்துறை நெடுஞ்சாலையில் நெல்லை கொட்டி உலர்த்தி வருவதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலையோரத்தில் நெல்லை கொட்டி உலர்த்துவதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.