குடிநீர் இல்லாத ரயில் நிலையம் காஞ்சியில் பயணியர் அவதி
பழைய ரயில் நிலையத்தில் உள்ள குழாய்களில், தடையின்றி குடிநீர் கிடைக்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை;
காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம் என அழைக்கப்படும், பழைய ரயில் நிலையம் வழியாக, அரக்கோணம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் இயக்கப்படுகின்றன. தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் இங்கிருந்து ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். பயணியரின் வசதிக்காக, ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குழாயில் குடிநீர் வரவில்லை. இதனால், குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ள பீடம் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியரின் தாகம் தீர்க்க வழி இல்லாமல் உள்ளது. இதனால் பயணியர் தாகத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பழைய ரயில் நிலையத்தில் உள்ள குழாய்களில், தடையின்றி குடிநீர் கிடைக்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.