புத்தகரத்தில் நெல் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் விளைச்சல் அமோகம் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி;
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புத்தகரம் கிராமம். இக்கிராமத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ், 200 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரைக் கொண்டு அப்பகுதியில் உள்ள 350 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும். அதன்படி, இந்த ஆண்டு பருவ மழைக்கு புத்தகரத்தில் ஏரி முழுமையாக நிரம்பியது. அதை தொடர்ந்து, அப்பகுதியில் நவரை பருவ சாகுபடிக்கு, 300 ஏக்கரில், விவசாயிகள் நெல் பயிரிட்டனர். தற்போது, அப்பயிர்கள் செழிமையாக வளர்ந்து அமோக விளைச்சல் தந்துள்ளது. சாகுபடி காலத்தில் குறைவான பனிப்பொழிவு நிலவியதாகவும், மழைப்பொழிவும் அதிகம் இல்லாததால், பருவநிலைக்கு ஏற்ப, நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். அடுத்த சில நாட்களில் இப்பயிர்கள் அறுவடை செய்ய உள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.