சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
போலீசார் விசாரணை;
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 51). ஆயுள் தண்டனை கைதி. கடந்த 2012-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் சிறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறைக்காவலர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த செல்வகுமார் நேற்று திடீரென இறந்தார். இது குறித்து சிறைக்காவலர்கள் அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, செல்வகுமார் உடலை பார்த்து விசாரணை நடத்தினார்.