காவிரி கடைமடை பகுதியான ஏர்வைக்காடு கதவணைக்கு காவிரி நீர் வந்தடைந்தது

விவசாயிகள் நெல்மணிகள் - மலரை காவிரி நீரில் தூவி உற்சாக வரவேற்பு;

Update: 2025-06-21 08:32 GMT
டெல்டா பாசன விவசாயத்திற்காக கடந்த 12 -ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்  திறந்து விடப்பட்டது. இந்நிலையில், காவிரி நீர் கல்லணை வழியாக தற்போது, காவிரி கடைமடை பகுதியான, நாகை மாவட்டத்திற்கு வந்து சேர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த  ஏர்வைக்காடு கதவணை பகுதிக்கு, காவிரி நீர் வந்து சேர்ந்ததை அடுத்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர் தலைமையில் விவசாயிகள் நேற்று நெல்மணிகள் மற்றும் மலரை காவிரி நீரில் தூவி உற்சாகமாக வரவேற்று, சூரிய பகவானை வழிப்பட்டனர். கோடை மழை கை கொடுத்ததால், விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காவிரி நீர் கடைமடை பகுதி வரை சென்று சேர்ந்துள்ளதை, நீர்வளத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் 20 ஆயிரம் கன அடி வீதம் தொடர்ந்து, 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடி  சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் கவிராஜ், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், கீழையூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் பாரூக் முகமது, ஒன்றிய துணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News