தூர்வாராத வாய்க்கால்களை மீண்டும் தூர்வார வலியுறுத்தி

கீழையூர் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்;

Update: 2025-06-28 13:05 GMT
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து, கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர், நாகை மாவட்டம் கடைமடைக்கு வந்து சேர்ந்தாலும், பல்வேறு வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்களுக்கு முழுமையாக நீர் சென்று சேராததால், குறுவை நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காவிரி குண்டான் வாய்க்காலில் இருந்து பாசனம் பெறக்கூடிய கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பிடாகை, காரப்பிடாகை, மகிழி, திருப்பூண்டி, சிந்தாமணி, திருப்பூண்டி கிழக்கு ஆகிய கிராமங்களுக்கு போதுமான தண்ணீர் வந்து சேர வில்லை. குறைந்த அளவு வாய்க்காலில் வந்த தண்ணீரை டீசல் மோட்டார் மூலம் வயல்களுக்கு பாய்ச்ச வேண்டிய அவல நிலை ஏற்பட்டதற்கு, முறையாக தூர் வாராததுதான் காரணம் என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தூர்வாராத வாய்க்கால்களை மீண்டும் தூர்வார . வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தூத்துக்குடி- நாகை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று கீழையூர் கடைத்தெரு அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். போராட்டத்தில், விவசாய சங்க மாநில துணைத் தலைவர் வீ.சுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து, விவசாயிகள், விவசாயி கூலி தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் கவிதாஸ் தலைமையில், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் பொதுப்பணி துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தில், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் என்.பன்னீர்செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி.பழனிவேல், எஸ்.டி.செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News