தஞ்சாவூர் அரசு பூம்புகார் விற்பனை நிலையத்தில் பொம்மைகள் கண்காட்சி 

பொம்மைகள் கண்காட்சி;

Update: 2025-08-09 13:09 GMT
தஞ்சையில் உள்ள அரசு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் பொம்மைகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ணஜெயந்தி வருகிற 15- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசின் கைத்திறன்தொழில் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் பூம்புகார் விற்பனை நிலையத்தில் ஆண்டுதோறும் ''கிருஷ்ண தரிசனக் கண்காட்சி” நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் வருகிற16-ஆம் தேதி வரை கிருஷ்ண தரிசன கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த கண்காட்சியில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம். கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப்பொருட்களால் தயரிக்கப்பட்ட கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. அனைத்து கிருஷ்ணர் பொம்மைகளுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி வாயிலாக ரூ.6 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுடைய பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தித்தரவும், வாடிக்கையாளர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழாவினை சிறப்பாக கொண்டாடப் பலவித கிருஷ்ணர் பொம்மைகள் வரவழைத்து ஒரே இடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சக்திதேவி தெரிவித்தார்.

Similar News