கோவை விமான நிலையத்தில் பிருந்தா காரத் செய்தியாளர் சந்திப்பு !
கரூர் நிகழ்வில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என பிருந்தா காரத் விளக்கம்.;
கோவை விமான நிலையத்தில் மேற்கு வங்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்ந்த பிருந்தா காரத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பழனியில் நடைபெறும் மலைவாழ் மக்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்வதாக தெரிவித்தார். கரூரில் நடைபெற்ற வெற்றி கழக நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், அந்த சம்பவம் குறித்து விசாரணை ஆணையத்தின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் கூறினார். தமிழ்நாடு முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும், கூட்டங்கள் நடத்தும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார். உத்திரபிரதேசத்தில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியிலும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் கூறினார். கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐஎம் சார்பிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்தார். 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர் நிகழ்விடத்தை விட்டு சென்றது வருத்தமளிப்பதாகவும், இதை நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் பிருந்தா காரத் கூறினார்.