திருச்செங்கோட்டை அடுத்த காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் சாமி தரிசனம்

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளிப்பட்டி கந்தசாமி முருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது.இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2026-02-01 16:55 GMT
கந்தனுக்கு அரோகரா என்ற கோஷம் முழங்க,150 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளிப்பட்டி கந்தசாமி முருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது.இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து சாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருநாள் முருகனின் பிறந்த நாளாக கருதப்பட்டு முருகன் கோவில்கள் உள்ள அனைத்து பகுதிகளிலும் தைப்பூச தேர்த் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் -நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற150 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் வருடம் தோறும் தைப்பூச திருநாளன்று தேர்திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும்தைப்பூச தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். ராசிபுரம், திருச்செங்கோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு வழிநெடுக பக்தர்கள் அன்னதானம், சிற்றுண்டி வழங்கினர். தைப்பூச திருநாளான இன்று காலை 5மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆறு மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3:30மணியளவில், இந்து அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் நாமக்கல் உதவி ஆணையர் சுவாமிநாதன் பரம்பரை அறங்காவலர் செல்வகுமார் செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலையில், திருத்தேர் வடம் பிடித்து கோவிலை சுற்றிஉள்ள நான்கு ரத வீதிகளில்வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா எனும் கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு எழுப்பி, மனமுருக முருகனை வேண்டி, திருத்தேரை வடம் பிடித்தனர். மக்கள் வெள்ளத்தில் திருத்தேர் மிதந்து சென்றது. பலர்பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக்காவடி இளநீர் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து ஆடியபடி வந்தனர். தொடர்ந்துகலை நிகழ்ச்சிகள் மற்றும் பரதநாட்டியம் ஆகியவை நடக்க உள்ளது மக்களின் பாதுகாப்பிற்காக ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதுமட்டுமல்லாது, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், மருத்துவத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மக்களின் பாதுகாப்பிற்காக ஆங்காங்கே இருந்தனர். திருவிழாவின் ஆறாம் நாளான நாளை சுவாமிக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். நாளை இரவு ஏழு மணிக்கு முத்து பல்லாக்கில் சுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதிஉலா நடைபெறும். இரவு ஒரு மணிக்கு, சத்தாபரண மகாமேரு நடைபெறும். எட்டாம் நாளான புதன்கிழமை வசந்த விழாவுடன் திருவிழா முடிவடைகின்றது. திருவிழா ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர், செல்வகுமார் மற்றும் செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர். கந்தசாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் சிறப்புகளில் ஒன்றான சர்க்கரை மிட்டாய் கடைகள், வெள்ளை கரும்பு, உலக்கை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது தொடர்ந்து நாளைபுகழ்பெற்ற நாட்டு மாட்டு சந்தை நடக்க உள்ளது.

Similar News