சேலம் மாவட்டத்தில் 37 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க முடிவு

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update: 2025-03-01 09:07 GMT
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரக பகுதிகளில் விரைவில் மினி பஸ்கள் சேவை தொடங்குவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மினி பஸ்களுக்கான புதிய விரிவான திட்ட அரசாணை பொதுமக்களின் நலன் கருதி அரசு வெளியிட்டது. இந்த திட்டத்தின் படி அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கிலோ மீட்டர் தூரம் ஆகும். சேவை செய்யப்படாத வழித்தடத்தில் ஏதேனும் ஒரு குடியிருப்பாகவோ?, கிராமமாகவோ? இருக்க வேண்டும். அதில் ஒன்று பஸ் நிறுத்தமாகவோ அல்லது பஸ் நிலையமாகவோ? இருக்கலாம். ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 4 நடைகளுக்கு குறைவாக பஸ் அல்லது மினி பஸ் இயக்கப்படும் வழித்தடங்கள் அனுமதிக்கப்படாத வழித்தடங்களாக கருதப்படும். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்குவதற்காக அனுமதி சீட்டு வழங்கப்பட்டு உள்ளன. அதில் பெரும்பாலான வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் தற்போது வரை புதிதாக 37 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கள் பகுதிகளில் மினி பஸ்கள் இயக்க வேண்டும் என்றால் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வழித்தட எல்லைக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் 16.25 கிலோ மீட்டர் தூரம் பஸ் சேவை இல்லாத வழித்தடமாகவும், 8 கிலோ மீட்டர் பஸ் சேவை இருக்கும் வழித்தடமாகவும் இருக்க வேண்டும். கோரிக்கையை ஆய்வு செய்த பின்னர் மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News