வெள்ளப்பெருக்கால் 78 குடும்பத்தினர் முன்னேற்பாடாக முகாம்களில் தங்க வைப்பு

குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 78 குடும்பத்தினர் முன்னேற்பாடாக முகாம்களில் தங்க வைப்பு

Update: 2024-07-31 11:05 GMT
காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி நீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் மேட்டூர் அணையும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை தொடர்ந்து தற்பொழுது அணைக்கு வரும் நீரானது அப்படியே காவிரியில் 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி காவிரியில் 81 ஆயிரத்து 500 கன அடி நீர் வந்து கொண்டுள்ளதால், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியான கலைமகள் வீதி மற்றும் மணிமேகலை வீதிகளில் வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை வட்டாட்சியர் சிவகுமார் தலைமையில் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் குடியிருப்புகளை காலி செய்துவிட்டு, ஏற்கனவே தயார் நிலையில் உள்ள முகாம்களில் தங்க பொது மக்களை அறிவுறுத்தினர். இதை அடுத்து பொதுமக்கள் தாங்களாக முன்வந்து முகாம்களில் தங்கி வருகின்றனர். இதில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் நகராட்சி திருமணம் மண்டபம் மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வருவாய்த் துறையினர் நகராட்சி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பான முகாம் பகுதிகளில் தங்க வேண்டும் என ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரித்து வருகின்றனர். காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முகாம்களில் தங்கும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News