மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி

பேரணாம்பட்டு அருகே 32 வயதுடைய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2024-05-27 14:17 GMT

பலியானவர்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள பெரியதாமல் செருவு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் சுரேஷ் (32). இவருக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது. ஓசூர் அருகே உள்ள சின்ன ஏலகிரி கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி ஓசூரில் ஒரு கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் சுரேஷின் பாட்டி ஆதியம்மாள் பெரியதாமல் செருவு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார்.அவருடைய காரியம் நேற்று பெரியதாமல் செருவு கிராமத்தில் நடந்தது. இதில் சுரேஷ் சுடுகாட்டுக்கு சென்று கலந்து கொண்டார்.

பின்னர் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளித்து விட்டு உடை மாற்றுவதற்கு மோட்டார் அறைக்கு சென்று உடை மாற்றிவிட்டு வெளியே வந்தார். அப்போது மோட்டார் அறையில் இருந்து செல்லும் மின்சார ஓயர் அவர் மீது பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை டாக்டர் பரிசோதனை செய்தபோது சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோபிகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.பாட்டியின் துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் பேரன் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News